உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி துாய்மை பணிக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.990 கோடி ஒதுக்கீடு

காவிரி துாய்மை பணிக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.990 கோடி ஒதுக்கீடு

கரூர், ''காவிரி துாய்மை பணிக்கு, மத்திய அரசு முதற்கட்டமாக, 990 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறினார். கரூர் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், 11வது ஆண்டு மத்திய அரசின் சாதனை விளக்க மற்றும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், 67 ஆயிரம் கோடி ரூபாய் உள்கட்டமைப்புக்கு உருவாக்கப்பட்டது. இந்திய ராணுவ தளவாடங்கள் உலக நாடுகளுக்கு இணையாக தயாரிக்கப்பட்டு வருகிறது.கங்கை போல காவிரி துாய்மை செய்யும் வகையில், நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியில், 11,900 கோடி ரூபாய் அனுமதி கோரப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக, 990 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு வாய் திறக்கவில்லை.வரும் சட்டசபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் தங்கள் திட்டம் போல அறிவிப்பார். தமிழகத்தில் மணல் கொள்ளை அளவில்லாமல் நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ செல்ல, 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், மற்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ நடக்கும் நாளில் கொலை, திருட்டு குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !