சரக்கு வாகனம் மரத்தில் மோதி இருவர் பலி; ஐந்து பேர் காயம்
குளித்தலை:சாலையோர மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், மரம் வெட்டும் கூலி தொழிலாளிகள் இருவர் இறந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கீரனுாரை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள், நேற்று முன்தினம் 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில், வெட்டிய மரங்களை ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டம், கூடலுார் பகுதிக்கு சென்றனர். அங்கு மரங்களை விற்பனை செய்து விட்டு, இரவு அதே வாகனத்தில் பி.உடையாபட்டி, கீரனுார் சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையோர வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்தில், மரம் வெட்டும் கூலி தொழிலாளி சாமிப்பிள்ளை புதுாரை சேர்ந்த வீரமலை, 65, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கீரனுார் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பழனியப்பன், 65, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.