திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் உற்சவருக்கு வழிபாடு
கரூர்: கரைப்பாளையம், தங்காயி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்காடுதுறை மாரியம்மன் கோவில் உற்சவருக்கு வழிபாடு நடந்தது.கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் சிலையை கடந்த, 23ல் கரைப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து, கரைப்பாளையம் தங்காயி அம்மன் கோவிலில் வைத்தனர். நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து அம்மன் முன் படையலிட்டு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து மாவிளக்கு தட்டுகளை வைத்து பூஜை செய்தனர். நேற்று மாலை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன் உற்சவர் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.