முதல்வர் வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டாகியும் ஓசூரில் இனாம் நிலங்களுக்கு கிடைக்காத பட்டா
முதல்வர் வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டாகியும் ஓசூரில் இனாம் நிலங்களுக்கு கிடைக்காத பட்டாஓசூர்:ஓசூர் அருகே, 1,300 ஏக்கருக்கு மேலான இனாம் நிலங்களுக்கு, பட்டா வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் வாக்குறுதி கொடுத்து, நான்கு ஆண்டுகளான போதும் சோகம் தொடர்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சென்னசந்திரம், மாரச்சந்திரம், இளையசந்திரம், பைரசந்திரம், திம்மசந்திரம், உளியாளம் ஆகிய ஆறு கிராமங்களில், 2,400 ஏக்கருக்கு மேல் பைமாஸ் லேண்ட் எனப்படும் இனாம் நிலங்கள் உள்ளன. இதில் இளையசந்திரம், சென்னசந்திரம், பைரசந்திரம், திம்மசந்திரம் பகுதியில், 450 ஏக்கர் இனாம் நிலங்களை கையகப்படுத்தி, கெலவரப்பள்ளி அணை கட்ட அரசு பயன்படுத்தியது. இதற்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதவிர ஏரி, குளம், குட்டைகள், வழிப்பாதை போக மொத்தம், 1,300 ஏக்கருக்கு இனாம் நிலங்கள் பயன்பாட்டில் உள்ளன.இனாம்தாரர்கள் மூலம் விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா இல்லாமல் இனாம் நிலங்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் விவசாயம் செய்தும், வீடுகள் கட்டியும் மக்கள் வசிக்கின்றனர். இனாம் நிலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி, அரசியல்வாதிகள், அரசின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கைகளில் உள்ளன. கடந்த, 1963ல், இனாம் நிலங்களை கையகப்படுத்தி, ரயத்துவாரி பட்டா வழங்க அரசு முடிவு செய்து, 1965, நவ., 15ல், ஆறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தியது.இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டு, அரசிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இனாம் நிலங்களுக்கு பாத்தியப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்து, 2018 செப்டம்பரில் ஓசூரில் நிலவரி திட்ட தனி தாசில்தார் அலுவலகம், 2022ல், தனி வருவாய் மாவட்ட அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டது. தற்போது தனி வருவாய் மாவட்ட அலுவலராக செல்வராஜ் உள்ளார். மூன்று தனி தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர்.ஏழு ஆண்டுகளான போதும், இனாம் நிலங்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. 1,300 ஏக்கர் நிலத்திற்கு, 1,800க்கும் மேற்பட்டோர் பட்டா கேட்டு, தனி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். சூளகிரி அருகே சாமனப்பள்ளியில், 2021 ஆக., 5ல், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலினிடம், இனாம் நிலங்கள் குறித்து கேட்ட போது, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான், ஓசூரில் இனாம் நிலங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பணி விரைவுப்படுத்தப்பட்டு, உரிய வகையில் பரிகாரம் காணப்படும்.கடந்த ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது உண்மை. அதை முறைப்படுத்தி, அதற்கான முயற்சியில் இந்த அரசு முழுமையாக ஈடுபடும் என தெரிவித்தார். முதல்வர் கூறி, நான்கு ஆண்டுகளாகி விட்டன. ஆனால், தமிழக அரசு இனாம் நிலங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடாமல் உள்ளது. அதனால் சிறிய அளவில் நிலம் வைத்துள்ள விவசாயிகள், வீடு கட்டி குடியிருக்கும் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.