விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.10 லட்சம் நிதியுதவி
போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஊத்தங்கரை சட்டசபை தொகுதிகளில் கடந்த, 12-ல் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயண நிகழ்ச்சியை மேற்கொண்டார். அப்போது பர்கூரில் நடந்த நிகழ்ச்சியை பார்க்க, போச்சம்பள்ளி அடுத்த கீழ்மைலம்பட்டியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோர் ஈச்சர் மினி லாரியில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அன்று இரவு, மீண்டும் தங்கள் கிராமத்திற்கு திரும்பினர்.அப்போது அத்திகானுார் அருகே, காவேரிப்பட்டணம்--திருப்பத்துார் சாலையில், எதிரில் வந்த பிக்கப் வேன் மோதியதில், மினி லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் தங்கராஜ், 62, என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தாருக்கு அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், பொது நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, நேற்று காலை இறந்த தங்கராஜ் குடும்பத்தாரிடம், 10 லட்சம் ரூபாயை வழங்கினார். மேலும் சிகிச்சை பெற்றவர்களுக்கு மருத்துவ செலவுக்கான தொகை, 5.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ரவிச்சந்திரன், தங்கமுத்து, துாயமணி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.