வேறு சமூக பெண்ணை மகன் மணந்ததால் டார்ச்சர் ஊரை விட்டு ஒதுக்கியவர்கள் மீது முதியவர் புகார்
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டியை சேர்ந்த ஜெகதீசன், 70. இவர், தன் மனைவி ஜெயலட்சுமி மற்றும் உறவினர்களுடன் நேற்று, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:எனக்கு ஒரு மகள், இரு மகன்கள். இளைய மகன் கமல் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். அப்போது முதல், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரில் நடக்கும் சுக, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது.நாங்கள் கலந்து கொள்ளும் நேரத்தில், அவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது உள்ளிட்டவைகளை ஊர் கவுண்டர்கள் செய்து வந்தனர். தாதம்பட்டி மாரியம்மன் கோவில், எங்கள் உறவினர் முறையால், பூஜை செய்வது வழக்கம். நடப்பாண்டில் அக்கோவிலில் நான் பூஜை செய்யக்கூடாது என, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு நான் செலுத்தும் பங்கு தொகை உட்பட எதையும் வாங்க மறுத்து எங்கள் உறவினர்களையும் அவர்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு, எங்களை மிரட்டுகின்றனர்.இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னை குறித்தும், கட்ட பஞ்சாயத்து குறித்தும் போச்சம்பள்ளி போலீசில் தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும் மனுவை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி விட்டனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நியாயமாக விசாரிக்க வேண்டும்' என்றனர்.