யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட விவசாயிகள் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரியில் நேற்று, தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சங்க மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்து பேசியதாவது:ஆந்திரா வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த, 5 யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன் தலைமையில், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தாலும், யானைகள் அங்கிருந்து நகராமல் உள்ளன. இவை தொடர்ந்து, மகாராஜகடை பகுதிகளில், தக்காளி, வாழை, தென்னை, மா என பல்வேறு பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மகாராஜகடை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்ட, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.