தென்பெண்ணை ஆற்றில் நுரையுடன் பெருக்கெடுத்த வெள்ளம்
ஓசூர்:ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 1,745 கன அடி நீர் திறப்பால், ரசாயன நுரையுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் மாலை, 1,430 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 1,572 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.84 அடிக்கு நீர் இருப்பால், அணை பாதுகாப்பு கருதி, 4 மதகுகள் மற்றும் ஒரு மணல் போக்கி மதகு வழியாக தென்பெண்ணை ஆற்றில், 1,745 கன அடி, வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு, 60 கன அடி என மொத்தம், 1,805 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது, நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் ஆற்றில் திறந்து விடப்படும்.அதன்படி நேற்று கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்பட்ட நீரில் அதிகளவு ரசாயனம் கலந்திருந்ததால், தென்பெண்ணையாற்றில் ரசாயன நுரை ஏற்பட்டு தேங்கி, துர்நாற்றம் வீசியது. நுரை காற்றில் பறந்து, கரையோர விவசாய நிலங்களில் படர்ந்ததால், பயிர்கள் பாதிக்கப்பட்டன. நேற்று, 2வது நாளாக தென்பெண்ணை ஆற்றில், 1,000 கன அடிக்கும் மேல் நீர் திறப்பால், கரையோர மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்தங்கரையில், 73 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், கெலவரப்பள்ளி அணை, 60, நெடுங்கல், 41.40, ஓசூர், 38.60, பெனுகொண்டாபுரம், 36, கிருஷ்ணகிரி, சூளகிரி, தளி, 35, கே.ஆர்.பி., அணை, 31.20, தேன்கனிக்கோட்டை, 31, பாம்பாறு அணை, 28, போச்சம்பள்ளி, சின்னாறு அணை, 25, ராயக்கோட்டை, 21, பாரூர், 20.20, அஞ்செட்டி, 12.80 என மொத்தம், 548.20 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகி இருந்தது.