குப்பையை பிரித்தெடுத்து அகற்றும் பணி துவக்கம்
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, தாசேப்பள்ளி தின்னா பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. மொத்தம், ஒரு லட்சம் மெட்ரிக் டன் அளவில், மக்கும், மக்காத குப்பை கிடங்கில் கலந்து இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை படிப்படியாக அகற்றுவதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.முதற்கட்டமாக, 41,400 டன் அளவிலான குப்பைகளில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளான ரப்பர், பிளாஸ்டிக், கல், டயர் போன்றவற்றை தனியாக பிரித்து, அவற்றை பயோ மைனிங் முறையில் அகற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, துாய்மை பாரத திட்டத்தில், 3.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, மாநகர மேயர் சத்யா நேற்று துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலர் அஜிதா உடனிருந்தனர்.