ஊருக்குள் வராத அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு; அதிகாரிகள் சமரசம்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, ஊருக்குள் வராத டவுன் பஸ்சை, கிராம மக்கள் சிறைபிடித்தனர்.கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, 52ம் எண் அரசு டவுன் பஸ், காவேரிப்பட்டணம் வழியாக தளியூர், சென்னனுார், பனகமுட்லு சென்று வந்தது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியிலிருந்து புறப்பட்ட அந்த பஸ், பனகமுட்லு கூட்ரோடு பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டது. இதையறிந்து, கிராம மக்கள் வருவதற்குள் பஸ், கிருஷ்ணகிரிக்கு சென்றது.நேற்று காலை வந்த அந்த டவுன் அரசு பஸ்சை, பனகமுட்லு கூட்ரோட்டில் கிராம மக்கள் சிறைபிடித்தனர். 'முதியவர்கள், பெண்கள் பயணிக்கும் நிலையில், எவ்வாறு பாதியில் அவர்களை இறக்கி சென்றீர்கள்' எனக்கூறி டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை, கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். அப்போது, 'நேற்று முன்தினம் மாற்று பஸ் அனுப்பப்பட்டது. அதன் உயரம் சற்று அதிகம் என்பதாலும், பனகமுட்லு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் பஸ் உரசும் அபாயம் இருந்ததாலும், ஊருக்குள் வர முடியவில்லை. இனி எப்போதும் போல பழைய பஸ் அனுப்பி வைக்கப்படும், இனி ஊருக்குள் பஸ் வந்து செல்லும்' என கூறியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.