தொடக்கப்பள்ளி மாணவர்கள் களப்பயணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 4 மற்றும், 5ம் வகுப்பு படிக்கும், 25 மாணவ, மாணவியர், தங்களது பெற்றோர்களுடன் இணைந்து, ஒரு நாள் சிறப்பு களப்பயணம் மேற்கொண்டனர். முதலில், மாவட்ட மைய நுாலகம் சென்றவர்களுக்கு, நுாலக அலுவலர் நந்தகுமார், நுாலகத்தின் பயன்கள், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு மற்றும் நுாலகத்தில் செயல்படும் பிற பிரிவுகள் குறித்து விளக்கினார். அகழாய்வுகள் மற்றும் அருங்காட்சியகம் குறித்த பாடம், 5ம் வகுப்பில் இடம்பெற்றுள்ளதால், அதை நேரில் காண மாணவ, மாணவியர், மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, வரலாற்று ஆய்வு குழு தலைவர் நாராயணமூர்த்தி, காட்சிக்கு வைத்துள்ள பழங்கால பொருட்கள், தமிழர்களின் பாரம்பரியமான ஏறு தழுவுதல் மற்றும் நடுகற்களின் வரலாற்று சிறப்பு குறித்து கூறினார்.மாணவர்கள் கிருஷ்ணகிரி அருகிலுள்ள பத்மாவதி கோவில் மற்றும், 976 ஆண்டு பழமையான குணமதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு கல்வெட்டுகளை பார்வையிட்டு, அவற்றின் தொன்மை குறித்து அறிந்தனர். இதில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன், மாருதி மனோகரன், விஜயகுமார், தமிழ்செல்வன் மற்றும் அருங்காட்சியக பணியாளர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.