ஆர்.டி.ஓ., வாகனத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.2.46 லட்சம்
கிருஷ்ணகிரி, ஓசூர், வட்டார போக்குவரத்து அலுவலரின் வாகனத்திலிருந்து கணக்கில் வராத, 2.46 லட்சம் ரூபாயை, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், 56. இவர், கூடுதல் பொறுப்பாக, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தையும் கவனித்து வருகிறார். இங்கு அனுமதிச்சீட்டு தொடர்பான பணிகள், மினி பேருந்து ஸ்கீம், அலுவலக தணிக்கை, ஓட்டுனர் பயிற்சி பள்ளி தொடர்பான பணிகள் செய்து முடித்துக் கொடுக்க பொதுமக்கள், இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெற்று, அரசு வாகனத்தில் எடுத்து செல்வதாக, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, தர்மபுரி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., நாகராஜன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மஞ்சுநாதன் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த அவரது வாகனத்தை சோதனையிட்டதில், கணக்கில் வராத, 2.46 லட்சம் ரூபாய் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், ஆர்.டி.ஓ., பிரபாகரை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.