பங்குச்சந்தை வர்த்தகம் செய்யலாம் எனக்கூறி 1.22 கோடி மதிப்புள்ள பணம், நிலம் சுருட்டல் மதுரையில் 2 பேர் கைது ஒருவர் துபாய்க்கு ஓட்டம்
மதுரை : மதுரையில் பங்குச்சந்தை வர்த்தகம் செய்யலாம் என ஆசைவார்த்தை கூறியும், நிலத்தை அடமானம் வைத்து லாபம் பார்க்கலாம் என்று கூறியும் ரூ.1.22 கோடி மதிப்புள்ள பணம், நிலத்தை சுருட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய கூட்டாளி துபாயில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.மதுரை ஆண்டாள்புரம் சதீஷ்குமார் 46. வணிக ஆலோசகராக உள்ளார். இவரது நண்பர் மூலம் சுந்தராஜபுரம் பாலசுப்பிரமணியன், வில்லாபுரம் சரவணகுமார் அறிமுகமாயினர். இவர்கள் காண்டி டிரைனர்ஸ் பி.லிட்., என்ற பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தினர். இதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 3 சதவீதம் வருவாய் கிடைக்கும் என நம்பி சதீஷ்குமார், ரூ.22 லட்சம் முதலீடு செய்தார். 3 மாதங்களுக்கு வருவாயாக தலா ரூ.66 ஆயிரம் கொடுத்தனர். பிறகு 'நாங்கள் தரும் (போலியானது) செயலியில் பதிவு செய்து நீங்களே வர்த்தகம் செய்யலாம்' என்று கூறி, சதீஷ்குமார் ஏற்கனவே முதலீடு செய்த ரூ.22 லட்சத்தை இந்த செயலிக்கு மாற்றினர். சில வாரங்களுக்கு பிறகு 'உங்களது வர்த்தக கணக்கில் பங்கு சந்தை வீழ்ச்சியால் ரூ.40 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதை செலுத்த வேண்டும்' என நெருக்கடி கொடுத்தனர்.அதிர்ச்சியடைந்த சதீஷ்குமாருக்கு ஆறுதல் கூறுவது போல், 'உங்களிடம் ரூ.பல கோடி மதிப்புள்ள நிலம் இருந்தால் எங்களுக்கு பவர் எழுதிக்கொடுங்கள். அதை ரூ.2 கோடிக்கு அடமானம் வைத்து அதில் ரூ.ஒரு கோடியை உங்களிடம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் ரூ.ஒரு கோடியை வைத்து பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்கிறோம். அதில் வரும் லாபத்தை வைத்து அடமான நிலத்தை மீட்பதோடு, ஏற்கனவே நஷ்டமான ரூ.40 லட்சத்தையும் சரிகட்டி விடுவோம்' என்றனர்.இதை நம்பி தேனி உத்தமபாளையத்தில் உள்ள பூர்வீக நிலம் 73 சென்ட் இடத்தை சரவணகுமாருக்கு சதீஷ்குமார் 'பவர்' எழுதிக்கொடுத்தார். மறுநாளே 73 சென்ட்டில் 20 சென்ட்டை மதுரை அவனியாபுரம் பிரேம்குமார் என்பவருக்கு சரவணகுமார் 'பவர்' எழுதிக்கொடுத்து ரூ.ஒரு கோடிக்கு இடத்தை விற்றார்.இதன்பிறகே தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். ரூ.1.22 கோடி மதிப்புள்ள இடம், பணத்தை மோசடி செய்தது உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், பிரேம்குமாரை கைது செய்தனர். சரவணகுமார் துபாயில் தஞ்சம் அடைந்தார்.சதீஷ்குமார் போன்று பலரிடம் மோசடி செய்த பணத்தை துபாயில் சில தொழில்களில் முதலீடு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யும் வகையில் விமான நிலையங்களில் 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.