| ADDED : ஜூன் 07, 2024 06:29 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஊத்துக்குளி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமாகிவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தென்கரை ஊத்துக்குளி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஏக்கர் வரையிலான நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து, தண்ணீரில் மூழ்கின.விவசாயிகள் செல்வமணி, நடுக்காட்டான் கூறியதாவது: 3 ஏக்கரில் கோ.53 நெல் ரகம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் ஒன்றரை ஏக்கர் அளவிற்கு சாய்ந்து விட்டது. ரூ.80 ஆயிரம் வரை கடன் வாங்கி விவசாயம் செய்தோம். மழை பெய்யும் போது எங்கள் ஊரில் அதிக சேதாரமாகிறது. ஏ.டி.டி.45 ரக நெல் 3 ஏக்கரில் பயிரிட்டு இருந்தேன். 2 ஏக்கர் வரை பாதித்துள்ளது என்றனர்.அதேபோல் விவசாயி நல்லதம்பியின் 8 ஏக்கர் மழையால் பாதித்துள்ளது. நேற்று வேளாண் துறை உதவி இயக்குனர் பாண்டி, துணை அலுவலர் பெருமாள், உதவி அலுவலர் விக்டோரியா செலஸ், வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ் மழையால் பாதித்த வயல்களை பார்வையிட்டனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தனர்.