உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உருவ வழிபாடே ஆன்மிகத்திற்கான ஆரம்ப பாதை ராமகிருஷ்ணர் அறிவுரை

உருவ வழிபாடே ஆன்மிகத்திற்கான ஆரம்ப பாதை ராமகிருஷ்ணர் அறிவுரை

மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் தியாகராஜர் குழுமம் சார்பில் பாம்பே ஞானம் ஆர்ட்ஸ் அகாடமியின் மஹாலட்சுமி மகளிர் நாடக குழுவினரால் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நடந்தது.முற்றிலும் மகளிரால் நிகழ்ந்த இந்நாடகத்தின் முதல் பாதி சைதன்யரின் அவதாரமான ராமகிருஷ்ணரின் இளம் பருவத்தையும், 2ம் பாதி சுவாமி விவேகானந்தருடனான குரு - சிஷ்ய உறவையும் பிரதிபலித்தனர். உலக மக்களுக்கு தாயான ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா தேவி தன் கணவரையே முதல் குழந்தையாக ஏற்று கொண்ட நிகழ்வு, ராமகிருஷ்ணருக்கு காளி காட்சி கொடுத்த தருணம், கடவுளை காண துடிக்கும் விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணரே காளியாக காட்சி தந்த தருணம், விவேகானந்தர் சிகாகோவில் நிகழ்த்திய உரை மெய்சிலிர்க்க வைத்தன.ஆன்மிகத்திற்கு உருவ வழிபாடே ஆரம்ப பாதை. அழிக்கவும் ஆக்கவும் நெருப்பு பயன்படுவது போல இவ்வுலகிலுள்ள நல்லவரும் தீயவரும் கடவுளின் ரூபம். காமம், கோபம், வஞ்சம் போன்றவற்றை விட்டொழித்து கடவுள் தன்மையை அடைய வேண்டும் போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.ராமகிருஷ்ண பரமஹம்சராக சாய் சத்யா, சாரதா தேவியாக அபர்ணா கணபதி, விவேகானந்தராக கிருஷ்ணகுமாரி, நரேந்திரனாக ஹம்சா, ராமகிருஷ்ணரின் குரு பைரவி பிராமிணியாக பத்மா கணபதி என மகளிர் பலர் நடித்தனர். கலை இயக்குநர் மோகன் பாபு, ஒப்பனை கண்ணன், சாமி. மேடை நிர்வாகம் துளசிராமன். இசை திவாகர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் பாம்பே ஞானம். முடிவில் ராமகிருஷ்ணரின் தரிசனம் நிகழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி