| ADDED : ஜூலை 10, 2024 04:15 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்து 65 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடுகின்றனர்.வாகைகுளம் மாயோன் நகர் தோட்டத்து வீட்டைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள் 70. இரு மகன்கள் மஹாராஷ்டிராவில் முறுக்கு வியாபாரம் செய்கின்றனர். மகள் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் கணவருடன் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன் தங்கராசு டூவீலரில் விபத்தில் சிக்கி மகள் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் காசம்மாள் மட்டும் வாகைகுளம் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.நேற்று காலை 7:00 மணி ஆகியும் அவர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காசம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி., அரவிந்த், டி.எஸ்.பி., அருள், இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், காசம்மாள் அணிந்திருந்த 15 பவுன் நகைகள், பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.