உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெளிநாடுகள் விரும்பும் மதுரை ஏர்போர்ட்: மத்திய அரசு மனது வைக்காத மர்மம் என்ன

வெளிநாடுகள் விரும்பும் மதுரை ஏர்போர்ட்: மத்திய அரசு மனது வைக்காத மர்மம் என்ன

மதுரை: வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி சேவை வழங்க தயாராக உள்ளன. ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான விமான நிலைய சேவை ஒப்பந்தத்தில் (பாசா) மதுரையை சேர்க்க மத்திய அரசு மறுக்கிறது என மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தகச் சங்கத்தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஐக்கிய அரபு நாடுகளில் துபாய், ஷார்ஜா, அபுதாபியும் மலேசியா, சிங்கப்பூர், தோஹாவில் உள்ள விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி சேவையை துவக்க தயாராக உள்ளன. மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் மிக அதிகம். 'பாசா' ஒப்பந்தத்தில் எந்த விமான நிலையம் சேர்க்கப்படுகிறதோ அதற்கு நேரடியாக பன்னாட்டு விமான சேவை மேற்கொள்ளப்படும். தற்போது வரை மதுரை சுங்க (கஸ்டம்ஸ்) விமான நிலையமாக மட்டுமே செயல்படுகிறது.தென்தமிழக விமான பயணிகள் மதுரை விமான நிலையத்தில் இருந்து கலாசாரம், சமூகத்தொடர்பு மற்றும் வணிகத் தொடர்புக்காக நேரடியாக பிற நாடுகளுக்கு பயணிக்க முடியவில்லை. இதனால் தென்தமிழகத்திற்கும் இதர நாடுகளுக்கும் இடையேயான ஆன்மிக, மருத்துவ சுற்றுலா திட்டங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சில விமான நிலையங்களை கட்டும் போதே சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 சுங்க விமான நிலையங்களில் அதிகளவில் பன்னாட்டு பயணிகளை கையாள்வது மதுரை விமான நிலையம் தான். மதுரை, சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள், மலர்கள், வேளாண் உணவுப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் தேவையான விமானத் தொடர்பு இல்லாததால் மதுரையில் இருந்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது.மதுரை விமான நிலைய ஓடுபாதையை நீட்டித்தால் சர்வதேச விமான நிலையமாக மாற்றலாம். அவ்வாறு நீட்டிக்கும் போது மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் 'அண்டர்பாஸ்' மூலம் வாகனங்கள் சுரங்கப்பாதையில் செல்லவும் விமானங்கள் ஓடுபாதை மேலாக செல்லவும் வசதி செய்ய வேண்டும். தேவை மற்றும் தகுதி அடிப்படையில் மதுரையை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

G VEERAMANIKANDAN
ஜூன் 17, 2024 07:43

ஒன்றிய அரசின் பாராபட்சம் பார்க்காமல் செயல்படாமல் மதுரையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 24 மணி நேரம் செயல்படும் என அறிவித்து ஒரு வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. புதிதாக பொறுப்பேற்று உள்ள ஒன்றிய விமானத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.


Bhaskaran
ஜூன் 16, 2024 20:54

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளது எனவே மதுரை விமான நிலையத்தை வளர்ச்சி அடைய விடமாட்டார்கள் காம்ரேட் நாடாளுமன்றம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சாதிக்க வேண்டும்


venugopal s
ஜூன் 16, 2024 13:09

மதுரை தமிழ்நாட்டில் இருப்பது தான் மத்திய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு ஒரே காரணம். இதே மதுரை குஜராத்திலோ உத்தரப்பிரதேசத்திலோ இருந்திருந்தால் சர்வதேச விமானநிலைய அந்தஸ்து எப்போதோ கிடைத்திருக்கும்!


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ