உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாவட்டத்தில் நீக்கப்பட வாய்ப்புள்ள வாக்காளர்கள் 3 லட்சம் பேர்! எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்து நாளை பட்டியல் வெளியீடு

மாவட்டத்தில் நீக்கப்பட வாய்ப்புள்ள வாக்காளர்கள் 3 லட்சம் பேர்! எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்து நாளை பட்டியல் வெளியீடு

மதுரை, : மதுரை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் முடிந்து வாக்காளர் வரைவுபட்டியல் நாளை (டிச.19) காலை வெளியிடப்படுகிறது. மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிகளிலும் 10 சதவீதம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) நவ.4 ல் துவங்கி டிச. 3ல் முடியும் நிலையில் பின் 2 முறை நீட்டிக்கப்பட்டு நேற்று (டிச.17) முடிந்தது. இப்பணிகள் முடிந்து வாக்காளர் வரைவு பட்டியலை நாளை கலெக்டர் பிரவீன் குமார் வெளியிட உள்ளார். அதன்பின் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களை சேர்க்கவோ, முகவரி மாற்றம் உட்பட திருத்தங்களை மேற்கொள்ளவோ, புதிய வாக்காளர்கள் சேரவோ மனு அளிக்கலாம். அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து 2026 ஜன.18 வரை வழங்கலாம். மனுக்களை பரிசீலனை செய்து விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, பதிவேற்றம் செய்து பிப்.17 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 1.1.206 ல் 18 வயது பூர்த்தியடைவோர் இப்போதே மனுக்களை பெற்று வழங்கலாம். நாளை வெளியிடப்படும் வாக்காளர் வரைவுபட்டியல், பிப்.17 ல் வெளியிடப்படும் இறுதிப் பட்டியலை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகங்களில் பார்வையிடலாம். ஆன்லைன் மூலமும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என அறியலாம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர்கள் நீக்கம் இந்நிலையில் மாவட்ட அளவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணி மூலம் இறந்துபோன வாக்காளர்கள் பெயர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளன. அடுத்த நிலையில் இடம்மாறியவர்கள், தொகுதி மாறியவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஓட்டு உள்ளவர்கள் போன்றோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது, ''வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் நாளை வெளியிடுகிறார். வாக்காளர் நீக்கம் குறித்து அந்த பட்டியல் மூலம் அப்போதுதான் தெரிய வரும்'' என்றனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.,க்களாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் அலுவலர்கள், அரசியல்கட்சி ஆர்வலர்களிடம் விசாரித்த போது, ''ஒன்பது முதல் 10 சதவீதம் அளவுக்கு நீக்கப்படலாம். மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எனவே 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

ஐந்து மையங்களில் ஓட்டு எண்ணிக்கை

மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி விட்டார். எஸ்.ஐ.ஆர்., பணிகளைத் தொடர்ந்து மின்னணு ஓட்டு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து ஓட்டு எண்ணும் மையங்களுக்காக பல்வேறு இடங்களை பார்வையிட்டு 5 இடங்களை தேர்வு செய்துள்ளார். மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இரு தொகுதிகளுக்கு ஒரு மையம் என்று ஒத்தக்கடை விவசாய கல்லுாரி, கீழக்குயில்குடி அண்ணா பல்கலை மையம், திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை கல்லுாரி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக எல்லா தேர்தல்களிலும் மதுரை மருத்துவ கல்லுாரிதான் பிரதான மையமாக செயல்படும். கடந்த லோக்சபா தேர்தலின் போது மாணவர்கள் சிலர் கல்லுாரியை ஓட்டு எண்ணிக்கை மையமாக செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றதால், இந்தாண்டு அதனை தவிர்த்து வேறு கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ