விமான நிலையம் தரம் உயர்வு
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திற்கு பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் நிர்வாகம் அடிப்படையிலான ஏ.பி.டி., தரம் மூன்றாம் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்திய அளவில் விமான நிலையங்களுக்கு பயணிகளின் வருகை, விமானங்கள் புறப்பாடு, அதிகரிக்கும் விமான சேவை, நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விமான நிலையங்களின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை, அகர்தலா, போபால், உதய்பூர், சூரத், விஜயவாடா ஆகிய 6 விமான நிலையங்களின் ஏ.பி.டி., தரத்தை மூன்றில் இருந்து இரண்டாக உயர்த்தியுள்ளது.