உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மத்திய அரசு விடுவித்தும் பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்காத ஆர்.டி.இ., தொகை தமிழக அரசை கண்டித்து பா.ஜ., போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசு விடுவித்தும் பள்ளிகளுக்கு இன்னும் கிடைக்காத ஆர்.டி.இ., தொகை தமிழக அரசை கண்டித்து பா.ஜ., போராட்டம் அறிவிப்பு

மதுரை: மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் சேர்க்கையான 25 சதவீதம் மாணவர்களுக்கான கட்டணத்தை விடுவித்தும் அதை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழக அரசை கண்டித்து பா.ஜ., (கல்விப்பிரிவு) சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிக்கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் ஆர்.டி.இ., நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்த கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தியது. இதையடுத்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் எதிரொலியாக மத்திய அரசு அதற்கான நிதி ரூ.586 கோடியை கடந்த மாதம் தமிழகத்திற்கு விடுவித்தது. ஆனால் இதுவரை அத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. இதனால் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் பொருளாதார ரீதியாக முடங்கி கல்விச்சூழல் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக பா.ஜ., மாநில செயலாளர் (கல்விப்பிரிவு) கல்வாரி தியாகராஜன் கூறியதாவது: தமிழகத்தில் செயல்படும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு 2021 -2022, 2022 - 2023 கல்வியாண்டுகளில் ஆர்.டி.இ.,யில் சேர்க்கையான மாணவர்களுக்கு கட்டண தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மாணவர்கள் நலன், நிர்வாக ரீதியாக பாதிக்கும் தனியார் பள்ளிகளின் நிலை குறித்து அறிந்து பின் அத்தொகையை மத்திய அரசு விடுவித்தது. ஆனால் ஒரு மாதமாகியும் இதுவரை பள்ளிகளுக்கு அத்தொகை கிடைக்கவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பள்ளிகள் சந்தித்து வருகின்றன. மாணவர்கள், பள்ளிகள் பாதிப்பை காட்டி நீதிமன்றம் சென்று கட்டணத் தொகையை பெற்ற தமிழக அரசு அதை பள்ளிகளுக்கு விடுவிப்பதில் ஏன் இழுத்தடிக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் நவ.,4ல் சென்னை டி.பி.ஐ., வளாகம் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன் பா.ஜ., கல்விப் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை