மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரக்கவி கல்வெட்டு
மதுரை: ''மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் வன்னிமர விநாயகர் சன்னதியில் உள்ள சித்திரகவிக் கல்வெட்டு கவிதையில் சிவன் அசுரர்களை அழித்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளது'' என மதுரை செந்தமிழ்க் கல்லுாரி உதவி பேராசிரியர் ஆறுமுகம் தெரிவித்தார்.மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். சங்க இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். கல்லுாரி பேராசிரியர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.'மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரகவிக் கல்வெட்டும் சிவபுராணக்கூறுகளும்' எனும் தலைப்பில் உதவி பேராசிரியர் ஆறுமுகம் பேசியதாவது: தமிழில் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என நான்கு வகையான தமிழ்க்கவிதைகள் உள்ளன. ஆசுகவி என்பது தலைப்பு கொடுத்தவுடன் பாடுவது, இனிமை பொங்கப் பாடுவது மதுரகவி, பொருள் விரித்துப் பாடுவது வித்தாரகவி, மனமுருகிப் பாடுவது சித்திரகவி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆறுகால் மண்டபம், கம்பத்தடி மண்டபம், அம்மன் சன்னதி மேற்கூரை, பழைய திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றில் சித்திரகவிகள் உள்ளன. மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ள சித்திரகவி சிவன், அசுரனை அழித்த புராணக்கதைகளைச் சொல்லுகிறது. வன்னிமர விநாயகர் சன்னதியில் சித்திரகவிக் கல்வெட்டு கவிதையில் சிவன் அசுரர்களை அழித்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளது என்றார்.