| ADDED : ஜன 28, 2024 07:08 AM
மதுரை : மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 4க்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் செங்குமடையைச் சேர்ந்தவர் முருகன் 59. ஜன.,24ல் டூவீலரில் சென்ற போது தானாக தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. ஜன.,25ல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் மாலை அவர் மூளைச்சாவு அடைந்தார்.மனைவி கனகாம்பாள் ஒப்புதலுடன் முருகனின் கல்லீரல் வேலம்மாள் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைக்கும், கருவிழிகள், எலும்பு தசைகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டன.ஆர்.எஸ்.மங்கலம்: செங்கமடையில் முருகனின் உடலுக்கு அரசு சார்பில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உடல் இடுகாட்டில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. முருகனுக்கு மகள்கள் நதியா, நந்தினி உள்ளனர். தாசில்தார் சுவாமிநாதன், புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி உட்பட அதிகாரிகள் இறுதிசடங்கில் பங்கேற்றனர்.