கள்ளழகரை வரவேற்று நேர்த்திக்கடன் செலுத்த தயாராகும் பக்தர்கள்
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் நாளை (மே 12) அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையாற்றில் அழகர் இறங்குகிறார். இதை முன்னிட்டு பக்தர்கள் திரி எடுத்தல், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்த தயாராகி வருகின்றனர்.சிந்தாமணி ஜெயச்சந்திரன், தல்லாகுளம் ரமேஷ் ஆகியோர் கூறுகையில், ''நாங்கள் சுவாமி கோயிலில் இருந்து புறப்படும் முதல் திரும்பும் வரை பக்தர்களுக்கு விசிறி வீசி வருகிறோம். இதை ஒரு சேவையாக செய்கிறோம்'' என்றனர்.நாமக்கல் சேந்தமங்கலம் மனோகரன் கூறுகையில், ''நாங்கள் 150 பேர் வந்துள்ளோம். 3 நாட்கள் இங்கேயே தங்கி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதும் ஊருக்கு புறப்படுவோம். விரதமிருந்து பாரம்பரிய முறையில் ஒருவர் உண்டியலை சுமந்து வந்து கள்ளழகர் மலையிலிருந்து புறப்படும் நாளன்று காணிக்கை செலுத்தி வருகிறோம்' என்றனர்.வில்லுார் மக்கள் கூறுகையில், ''ஆண்டுதோறும் திரி எடுத்து, கருப்பணசுவாமி வேடமிட்டு, சாட்டை அடித்து, சங்கு உள்ளிட்டவை அடித்தபடியே குழுவாக 10க்கும் மேற்பட்டோர் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். அழகருடனே புறப்பட்டு, திரும்பும் வரை உடன் செல்வோம்'' என்றனர்.பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஊர் தலைவர் வீட்டில் கருப்பணசுவாமி பெட்டி இருக்கும். சித்திரை திருவிழாவிற்காக இங்கு கொண்டுவந்து கள்ளழகரிடம் உத்தரவு பெற்று எடுத்துச்செல்வோம். இங்கே கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மே 12ல் வைகையில் இறங்குவார். கள்ளழகர் மலையிலிருந்து புறப்பட்டதும், நாங்களும் திரி எடுத்து ஆடி, பெட்டி துாக்கி சென்று உத்தரவு பெற்று இரவு பரமக்குடி கிளம்புவோம்'' என்றனர்.