வீடுகளுக்கு வரிவிதிக்க முடியாமல் 3 மாதங்களாக தவிப்போரால் கிராம பஞ்சாயத்து: சாப்ட்வேர் பிரச்னையால் மனஉளைச்சலில் ஊராட்சி செயலர்கள்
ஊராட்சிகள் வீட்டுவரி, சொத்துவரி என பலவித வரிகளை வசூலித்து வருகின்றன. குறிப்பாக வீடு, சொத்துவரி வசூல் போன்றவை 4 ஆண்டுகளுக்கு முன்பே கணினிமயமாகி ஊராட்சிகள் செயல்படுகின்றன. தற்போது 'சாப்ட்வேர்' பிரச்னையால் புதிய வீடுகளுக்கு வரிவிதிக்க முடியாமல் தாமதமாகிறது.புது வீடு கட்டியவர்கள் வரிவிதிப்புக்காக ஊராட்சிகளில் பதிவு செய்வர். 3 மாதங்களாக இதுபோன்ற பதிவு எதையும் மேற்கொள்ள இயலவில்லை. ஏற்கனவே உள்ள பழைய வீடுகள் கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ளதால் அவற்றுக்கு மட்டும் வரிவிதிக்கப்படுகிறது. சில வீடுகள் வணிக பயன்பாட்டுக்கானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சாப்ட்வேர் பிரச்னையால் அவற்றை நீக்கி வீடுகளுக்கான வரி வரம்புக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. பழைய வீடுகளுக்கு வரிவிதிப்பதால், புதிய வீடுகட்ட வருவோர் தங்களை வேண்டுமென்றே வஞ்சிக்கின்றனரோ என்றுகருதி, ஊராட்சி செயலர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். சில சமயம் 'பஞ்சாயத்து' பேசும் அளவுக்கு வலுத்துவிடுகிறது.மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 முதல் 40 வீடுகள் வரை இதே நிலை உள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் புலம்புகின்றனர். புதியவீடு கட்டுவோர் அதனை வீட்டுவரிவிதிப்புக்குள் கொண்டு வந்தால்தான் தற்காலிக வர்த்தக மின்இணைப்பு, வீடுகளுக்கானதாக மாறி, கட்டணம் மூன்றில் ஒன்றாகக் குறையும். இதற்காக வீட்டுவரி விதிப்புக்கு விண்ணப்பித்தோர், 90 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இதனால் ஊராட்சி மூலம் அரசுக்கு கிடைக்கும் வீட்டுவரி வருவாயிலும் இழப்பு ஏற்படுகிறது.
குளறுபடிக்கு காரணமென்ன
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறியதாவது: புதிய நிதியாண்டில் சொத்து வரியை உயர்த்தி, அதற்கேற்ப கடந்த ஏப்ரல் முதல் கணினியில் சாப்ட்வேரை மாற்றம் செய்ய ஏற்பாடு செய்தனர். புதிய சாப்ட் வேரை நிறுவுவதற்கு 60 நாட்களுக்கு மேலாகி விட்டது.எதிர்ப்பு கிளம்பியதால் அரசும் பழைய வீடுகளுக்கு மட்டும் இந்தாண்டும் பழைய வரியை வாங்கும்படி அறிவித்தது. அதன்படி வசூலிக்க கடந்த வாரம் மீண்டும் பழைய சாப்ட்வேரை சென்னையில் இருந்து 'அப்டேட்' செய்தனர். இந்த களேபரத்தில் கடந்த ஏப்ரல் முதல் புதிய வீடுகளை கட்டி வரிவிதிப்புக்கு விண்ணப்பிப்போருக்கு கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய சாப்ட்வேர் மூலம் இணைப்பு வழங்கவில்லை. இதனால் புதிய வீடுகளை கட்டியவர்களும், பழைய வணிகவரி விதிப்பில் உள்ளவர்களும் 90 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். அரசுதான் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.