அரசுப்பணிக்காக பல்கலைகளில் போலி கல்விச்சான்றுலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆவணங்களை வழங்குக 4 பல்கலைகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : தமிழ்வழியில் படித்ததற்கு குரூப் 1 தேர்வு மூலம் வேலைவாய்ப்பில் சலுகை பெற சிலர் பல்கலைகளில் போலியாக பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்ற விவகாரம் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வழங்க அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட 4 பல்கலைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:தமிழ்வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., 2020 ஜன.20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு, பல்கலை தொலைநிலைக் கல்வியில் கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ்வழியில் படித்து சான்று பெற்றவர்கள்.பள்ளிக் கல்வி முதல் கல்லுாரிவரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய இடஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2021 மார்சில் நீதிபதிகள் அமர்வு,'தமிழ்வழியில் படித்ததற்கான சலுகை பெற மதுரை காமராஜ் பல்கலையில் சிலர் போலிச் சான்று பெற்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு: குரூப் 1 தேர்விற்காக 4 பேர் மதுரை காமராஜ் பல்கலையில் போலியாக பி.எஸ்.டி.எம்.சான்று பெற்றுள்ளனர். இதற்கு பல்கலையின் 2 ஊழியர்கள், 3 தனிநபர்கள் உதவி செய்துள்ளனர். அவர்கள் மீது அக்.3 ல் வழக்கு பதியப்பட்டுள்ளது. வேறு பல்கலையில் இதுபோல் நடந்துள்ளதா என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது.விசாரணையில் திருப்தி இல்லை எனக்கூறி அதிருப்தியை நீதிபதிகள் வெளியிட்டனர்.நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர்: மதுரை காமராஜ் பல்கலை போலவே பிற பல்கலைகளிடமிருந்து விபரங்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. சான்று பெற்றவர்களின் விண்ணப்பம், மாணவர் சேர்க்கை தேதி, ஹால்டிக்கெட் உள்ளிட்ட சில விபரங்களை கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு போலீசார் கடிதம் அனுப்பினர். இதுவரை விபரங்களை பல்கலை வழங்கவில்லை. இதனால் 4 பல்கலைகளின் பி.எஸ்.டி.எம்.,சான்றுகளின் உண்மைத் தன்மையை போலீசாரால் சரிபார்க்க முடியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: பிற பல்கலைகளில் இதுபோல் பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்றவர்களின் விபரங்களை சரிபார்க்க இந்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 2021 ல் உத்தரவிட்டது. அண்ணாமலை பல்கலை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை, சென்னை பல்கலையில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எஸ்.டி.எம்.,சான்று பெற்ற 22 பேர் மீது விசாரணை அதிகாரிக்கு சந்தேகம் உள்ளது. அவர்கள் பற்றிய ஆவணங்களை வழங்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்கலைகளுக்கு கடிதங்கள் எழுதினர். பல்கலைகள் ஒத்துழைக்காததால், போலீசாரால் விசாரணையை முடிக்க இயலவில்லை. விசாரணைக்காக ஆவணங்களை வழங்குவதில் பல்கலைகள் ஒத்துழைக்காதது சட்டப்படி குற்றமாகும்.இவ்வழக்கில் அண்ணாமலை, மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், சென்னை பல்கலைகளின் பதிவாளர்களை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரரர்களாக இணைத்துக் கொள்கிறது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.ஒருவரை நியமித்து இப்பல்கலைகளிடமிருந்து அக்.,28 க்குள் தேவையான ஆவணங்கள் பெறப்படுவதை மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,உறுதி செய்ய வேண்டும்.விபரங்களை சேகரிப்பதில் போலீசாருக்கு மேலும் கால அவகாசம் வழங்க நீதிமன்றம் விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை வழக்கு, தண்டனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் உள்நோக்குடன் விபரங்களை மறைப்பவர்கள் மீது வழக்கு தொடரலாம். பல்கலைகளால் மேலும் தாமதம் ஏற்பட்டால், போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை சேகரிக்கலாம். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து போலீஸ் தரப்பில் அக்.28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.