பட்டாசு கழகம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில், வெடிபொருள் துணை தலைமை கட்டுப்பாட்டாளர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 450 பதிவு செய்த பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. சரியான கண்காணிப்பு இன்றி உற்பத்தி நடக்கிறது. 2024 முதல் 2025 ஆகஸ்ட்வரை பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் 77 பேர் இறந்துள்ளனர். பெரிய நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் உரிமம் இல்லாத சிறு யூனிட்கள் மூலம் உற்பத்தியை மேற்கொள்கின்றன. அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த தமிழக பட்டாசு கழகம் அமைக்க வேண்டும். தீ விபத்துகள், சட்ட விரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, 'வெடிபொருள் துணை தலைமை கட்டுப்பாட்டாளர் (பெசோ) அக்.31 ல் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டது.