திருச்செந்துார் கடலில் தடுப்புச் சுவர் அமைக்க வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: திருச்செந்துார் கடலில் அரிப்பு, அலைகளால் பக்தர்கள் காயமடைவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கடலில் புனித நீராடுகின்றனர். கடல் அலைகளின் தாக்கத்தால் காயமடைகின்றனர். தடுப்புச்சுவர் அமைப்பதன் மூலம் கடல் அரிப்பு, அலைகளிலிருந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கடற்கரையோரத்திலுள்ள கோயில் கட்டமைப்பை பாதுகாக்க முடியும்.பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.திருமலை திருப்பதி கோயிலைப் போல் தரிசனத்திற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகீதையன்: கோயிலில் ரூ.300 கோடியில் மாஸ்டர் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க நீர்வளத்துறை, சென்னை ஐ.ஐ.டி.,நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு ரூ.15 கோடி, கோயில் நிர்வாகம் ரூ.15 கோடி செலவிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.நீதிபதிகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல், வனத்துறை செயலர்கள், மாநில அறநிலையத்துறை செயலர், கமிஷனர் அக்.9 ல் அறிக்கை தாக்கல் செய்யநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.