மதுரை புதுமண்டபம் புனரமைப்பு ஆகம விதிகள்படி நடக்கிறதா அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணி ஆகம விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறதா என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மணிபாரதி ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் கலைநயமிக்க புதுமண்டபம் உள்ளது. அதில் கடைகள் இருந்தன. மண்டபத்தை புனரமைப்பதற்காக கடைகள், குன்னத்துார் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. மண்டபத்தை புனரமைக்கவில்லை. சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. புனரமைப்பு பணிக்காக ஒருவர் நன்கொடை தர முன்வந்தார். பணி ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. புனரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 2024 ஜூலை 19 ல் விசாரணையின்போது அரசு தரப்பு: அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுடன் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது. சிற்ப வேலைப்பாடு என்பதால் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். திட்ட மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம். இத்திருப்பணியை நன்கொடை அடிப்படையில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் செய்துதர மதுரை செல்லுார் ராஜேந்திரன் முன்வந்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த இரு நீதிபதிகள் அமர்வு,'புனரமைப்பு பணியை 2024 டிச.31க்குள் முடிக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர். மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர்,'புனரமைப்பு பணிக்கு மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு அளிக்க வேண்டும்,'என மனு செய்தார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆகம விதிகளை பின்பற்றி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் நவ.7 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.