கடன் வசூல் தீர்ப்பாயத்தில் காலி பணியிடம் எத்தனை? * உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை: தமிழகத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில், காலிப் பணியிடங்கள் எத்தனை உள்ளன என்பது குறித்து, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வங்கிகளில் கடன் பெற்றோரில் சிலர் முறையாக தவணையை செலுத்துவதில்லை எனக்கூறி, அவர்களின் சொத்துக்களை ஏலம் விட வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்புகிறது. இதை எதிர்த்து, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், உயர் நீதிமன்றக் கிளையில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்கின்றனர்.நீதிபதிகள் அமர்வு,'கடன் வசூல் தீர்ப்பாயங்களை அணுகி தீர்வு காணலாம்' என, அறிவுறுத்தி வருகிறது. மனுதாரர்கள் தரப்பில், 'தீர்ப்பாயத்தை அணுகினால் சில காரணங்களால், கேரளா எர்ணாகுளம் தீர்ப்பாயத்தை அணுக அறிவுறுத்தப்படுகிறது' என தெரிவிக்கின்றனர்.இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:தமிழகத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில், காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை; அங்குள்ள நீதிபதிகள் விடுப்பில் சென்றால், தீர்ப்பாயம் சுமூகமாக செயல்பட மாற்று வழிமுறையை கையாள, மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, நிதித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.