மேலும் செய்திகள்
மதுரை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு
5 hour(s) ago
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கிடந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். அம்மச்சியாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிக மோசமாக சேதம் அடைந்தது. இதனால் இதன் அருகே 'ஜல் ஜீவன் மிஷன்' 2022--23 திட்டத்தின் கீழ் ரூ.16.75 லட்சத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பல மாதங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. நான்கு நாட்களுக்கு முன் புதிய தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. வழக்கமான சுத்தம் செய்யும் பணிகளுக்காக நேற்று முன்தினம் (அக்.,7) தொட்டியின் மேலே சென்ற 'வாட்டர் பம்ப் ஆப்பரேட்டர்' மருதுபாண்டி தண்ணீரில் மலம் இருப்பதை உறுதி செய்தார். இத்தகவல் ஊருக்குள் பரவியதால் ஊராட்சி அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டுள்ளனர். தண்ணீரை வெளியேற்றிவிட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இத்தகவல் பரவி பிரச்னை பெரிதானதால் சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், பி.டி.ஓ.,க்கள் லெட்சுமிகாந்தம், கிருஷ்ணவேணி, துணை பி.டி.ஓ., பூர்ணிமா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் சிலர் விளையாட்டாக செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் திட்டமிட்டு கலக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago