| ADDED : ஜூலை 28, 2011 03:27 AM
மதுரை : 'மதுரையில் ஐந்து ஆடுவதை கூடங்கள் அமைக்க வேண்டும்,' என்ற, மத்திய
அரசின் தணிக்கை குழு பரிந்துரையை அமல்படுத்த மாநகராட்சி முடிவு
செய்துள்ளது. அனுப்பானடியில் நவீன ஆடுவதைக்கூடம் அமைக்கப்பட்டும்,
சுகாதாரமற்ற நெல்பேட்டை ஆடுவதை கூடத்தை பயன்படுத்த ஆட்டு இறைச்சி
வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். இது குறித்து ஐகோர்டில் வழங்கு தொடரப்பட்டு,
நெல்பேட்டை ஆடுவதை கூடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இறைச்சி வியாபாரிகள் தரப்பு தொடர்ந்த வழக்கில், 'வியாபாரிகள் கோரிக்கையை
பரிசீலிக்குமாறு,' கோர்ட் உத்தரவிட்டது. இதற்காக ஐந்து நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நெல்பேட்டை ஆடுவதைக்கூடம் செயல்பட
வாய்ப்புள்ளது. இது ஒரு புறமிருக்க, கடந்த 2008-09ல் நடந்த மத்திய அரசின்
தணிக்கை குழு ஆய்வில், 'மாநகராட்சியில் ஐந்து ஆடுவதைக்கூடம் அமைக்க
வேண்டும்,' என, பரிந்துரை செய்தது. இதை நடைமுறைப்படுத்த தாமதம் ஆனது.
அனுப்பானடி, நெல்பேட்டை ஆடுவதை கூடங்கள் செயல்படவிருக்கும் விலையில்,
வடக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் கூடுதல் கூடம் அமைக்கும், மத்திய
அரசின் பரிந்துரையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம்
தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர்
கூறியதாவது: நெல்பேட்டை ஆடுவதைக்கூடத்தை மையமாகவும், அனுப்பானடி கூடத்தை
கிழக்கு மண்டலத்திற்கும் பிரித்துள்ளோம். எஞ்சிய மூன்று மண்டலங்களுக்கு தனி
கூடம் அமைக்கப்படும். மாநகராட்சியை விரிவாக்கும் போது, பயனுள்ளதாக
இருக்கும், என்றார்.