| ADDED : ஜூலை 31, 2011 02:43 AM
மதுரை:மதுரையில் நடந்த நில அபகரிப்பு வழக்கு பைசல் ஆனதால், கைது
நடவடிக்கையில் இருந்து சோழவந்தான் (தனி) அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பையா
தப்பினார்.சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி. இவருக்கு பல லட்சம் ரூபாய்
மதிப்புள்ள நிலம் மதுரை வாவிடமருதூரில் இருந்தது. இதை ஹரிகரன், எம்.எல்.ஏ.,
கருப்பையா உட்பட சிலர் போலி ஆவணம் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து அபகரித்து
விட்டதாக போலீசாரிடம் ராஜேஸ்வரி புகார் கூறினார். ஹரிகரன், கருப்பையா உட்பட
சிலர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் மாவட்ட
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கருப்பையா கைது
செய்யப்படாதது குறித்து போலீஸ் எஸ்.பி., ஆஸ்ராகர்க் கூறும்போது,
''மனுதாரருக்கும், கருப்பையாவிற்கும் இடையே பிரச்னை பைசல் ஆகியுள்ளது.
புகாரை மனுதாரர் வாபஸ் பெற்றுள்ளார். இதனால், கருப்பையா உட்பட சிலர் கைது செய்யப்படவில்லை. தளபதி, 'பொட்டு' சுரேஷ் உட்பட
சிலர் மீது சிவனாண்டி - பாப்பா கொடுத்த நில அபகரிப்பு வழக்கிலும், அட்டாக் பாண்டி மீதான நில அபகரிப்பு வழக்கிலும் சார்-பதிவாளர்கள் தவறு
செய்யவில்லை, என தெரியவந்துள்ளது. பாண்டியராஜன் கொலையில் பயன்படுத்திய
மூன்று கார்களில் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு
வழக்கில் தொடர்புள்ள தாசில்தார் மாணிக்கம் மீது துறைரீதியான நடவடிக்கை
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.நில அபகரிப்பு வழக்கு பைசல்
ஆனதால், கைது நடவடிக்கையில் இருந்து கருப்பையா தப்பியது குறிப்பிடத்தக்கது.