மதுரை போலீசாரின் அக்கா திட்டம் புகார் தெரிவிக்க பெட்டிகள்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மதுரை மாநகர் காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர்கள் அனிதா, இனிகோ திவ்யன் முன்னிலை வகித்தனர். மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:மதுரையில் பெண் குழந்தைகள், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் துவக்கப்பட்டது தான் இந்த போலீஸ் அக்கா திட்டம்.மதுரையிலுள்ள 230 பள்ளிகள், 33 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக 95 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பெண் குழந்தைகள் கொடுக்கும் புகார்களை ரகசியமாக வைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உதவுவர். ஒவ்வொரு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும்.மாணவியர் நேரடியாக சொல்ல தயங்கும் விஷயங்களை அந்த புகார் பெட்டியில் தெரிவிக்கலாம். இத்திட்டம் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.