ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற மதுரை தாசில்தார், டிரைவர் கைது
மதுரை : 'கிரஷர் யூனிட்' அமைக்க அனுமதி வழங்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்ட மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டியனை 45, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் தெற்குதாலுகா சின்னஉடைப்பைச் சேர்ந்தவர் ரத்தினம். இவர் கொசவபட்டியில் கிரஷர் யூனிட் அமைக்க தெற்கு தாலுகாவில் விண்ணப்பித்தார். இதையடுத்து வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை இடத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து அனுமதி வழங்குவதற்கு ரூ. ஒருலட்சம் தரவேண்டும் என தாசில்தார் ராஜபாண்டியன் கேட்டார். அதன்பின் தாலுகா அலுவலகத்திற்கு ரத்தினம் அலைந்து திரிந்தார். அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. பேரம் பேசியதில் ரூ.70 ஆயிரம் கொடுத்தால் போதும் என தாசில்தார் தெரிவித்துள்ளார். நேற்று காலை ரத்தினம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தாசில்தார் அங்கு இல்லை. அலைபேசியில் அழைத்தபோது, மாலை 6:00 மணிக்கு அலுவலகம் வாருங்கள் என தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ரத்தினம் புகார் தெரிவித்தார். நேற்று மாலை தெற்கு தாலுகா வந்த ரத்தினத்திடம் டிரைவர் ராம்கேயிடம் 32, லஞ்சப்பணத்தை கொடுக்கும்படி தாசில்தார் கூறினார். இதையடுத்து தாசில்தார் ஜீப் அருகே லஞ்சபணத்தை ராம்கே பெற்றபோது ஏ.டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு, பாரதிபிரியா கைதுசெய்தனர். அவர் கூறிய தகவல்படி தாசில்தார் ராஜபாண்டியனையும் கைது செய்தனர்.