உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அர்த்த மண்டபமும் அர்த்தமில்லாத அவதுாறுகளும்

அர்த்த மண்டபமும் அர்த்தமில்லாத அவதுாறுகளும்

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு போனாலும் போனார், தமிழகத்தில் பலருக்கும் பொறுக்கவில்லை. இதுதான் நேரம் என்று நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி மேலேயும் கீழேயும் குதிக்கின்றனர். இதன் பின்னால் ஹிந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலும், ஆன்மிகவாதிகள் மீதான வன்மமும் தான் மறைந்து கிடக்கிறது.ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலுக்கு சென்ற இளையராஜாவுக்கு மற்ற முக்கியஸ்தர்களுக்கு செய்யப்படுவது போன்ற வரவேற்பும் மரியாதையும் செய்யப்பட்டன. கோயில் பட்டர்களும் அவருக்கு தர வேண்டிய மரியாதையில் இம்மி அளவும் குறை வைக்கவில்லை. ஆனால் அர்த்த மண்டபத்துடன் அவர் நிறுத்தப்பட்டதை சாக்காக வைத்து தமிழகத்தில் திராவிடம் பேசுவோரின், ஆன்மிகம் மீதான வெறுப்பு அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டது.அர்த்த மண்டபத்திற்குப் பிறகு கர்ப்ப கிரகத்தில் பூஜை செய்வோரைத் தவிர யாரும் செல்ல முடியாது என்று தெளிவாக திராவிட ஆட்சியின் கீழ் உள்ள அறநிலையத் துறை கூட விளக்கம் சொல்லிவிட்டது. அதன் பிறகும் இளையராஜாவை குறி வைக்கும் பாவனையில் ஹிந்து மதம் குறி வைக்கப்படுகிறது.இளையராஜாவுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசு ராஜ்யசபா எம்.பி., சீட் தந்தபோதே இந்த வன்மம் துவங்கி விட்டது. இளையராஜா ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லை. அவர் எம்.பி.,யாக்கப்பட்டதே அவரது இசை ஞானத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் மட்டுமே.ஆனால், இளையராஜா என்னவோ பா.ஜ., கட்சியின் பெரிய நிர்வாகி போலவும் அதனாலேயே அவர் எம்.பி.,யாக்கப்பட்டது போலவும் அவர் ஒரு ''சங்கி'' எனவும் ஒரு பெரிய கோஷ்டி அவதுாறுகளை கட்டவிழ்த்துவிட்டது. அப்போது இருந்தே தொடர்ந்து கருத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளையராஜா, இப்போது புதிதாக ஆண்டாள் கோயில் விவகாரம் மூலம் மீண்டும் இலக்கு வைக்கப்படுகிறார்.உண்மையில் இந்த தாக்குதல் இளையராஜா மீதானது மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஹிந்து மதத்தின் மீதானது. ஹிந்து மதத்தை பக்தி சிரத்தையுடன் பின்பற்றுவோர் எல்லாமே சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.சமூக வலைதளங்களில் இந்த சமூகவிரோதிகள் வெளியிடும் கருத்துகள், முழுக்க முழுக்க அவதுாறுகளாகத் தான் இருக்கின்றன. தனி மனித விமர்சனங்களும், ஜாதிய வன்மங்களும் கொப்பளிக்கின்றன. சமூகநீதி பேசும் இவர்கள் மட்டும் சமூகத்திற்கு எதிராகவே இருக்கிறார்கள். அன்பும், இரக்கமும் இவர்களிடம் துளி அளவும் இல்லை.பகவான் ஸ்ரீசத்யசாய் மனித குலம் பற்றி என்ன போதிக்கிறார் எனில், ''கடவுளின் குரலை மவுனத்தின் ஆழத்தில் மட்டுமே கேட்க முடியும். மவுனம் என்பது ஆன்மிகம் தேடுபவரின் பேச்சு நீங்கள் முழுமையான அமைதியில் மட்டுமே தெய்வீக பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.நாக்கு சில பெரிய தவறுகளுக்குப் பொறுப்பாகும்: பொய்யைப் பேசுதல், அவதூறு செய்தல், மற்றவர்களின் குறைகளைக் கண்டறிதல். தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் அமைதி ஏற்பட வேண்டுமானால் இவை தவிர்க்கப்பட வேண்டும்''. இவ்வாறு அவர் போதிக்கிறார்.ஆனால் நாம் என்ன செய்கிறோம். ஆன்மிகம் பேசுவோரை வெறுக்கிறோம்.அன்பை போதிப்போர் மீது சேற்றை வாரி இறைக்கிறோம்.இசை மூலம் தெய்வீகத்தை கண்டடைய வழி செய்த இசையமைப்பாளரை கண்மூடித்தனமாக வசை பாடுகிறோம். ஜாதிக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக்கொண்டே ஜாதி வெறியர்களாக வலம் வருகிறோம்.மனிதநேயர்கள் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் கோர முகத்தை கொண்டிருக்கிறோம். வெறுப்பை விதைக்கிறோம், சமூக ஒற்றுமையை சிதைக்கிறோம்.இளையராஜா விவகாரத்தை வைத்து சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும், 'டிவி ' விவாதங்களிலும் ஆன்மிகத்திற்கு விரோதமாக கருத்து சொல்லும் கந்தசாமிகளில் பலர், ஹிந்துக்களே அல்ல என்பதுதான் இன்னும் வேடிக்கை. இந்த பகல் வேஷம் என்று மாறும்...? உண்மை மனித நேயம் என்று தழைக்கும்? அடுத்து வரும் தலைமுறைக்காவது அன்பையும் இரக்கத்தையும் கற்றுத் தாருங்கள். வன்மத்திற்கு விடை கொடுங்கள். --எம்.எஸ்.தண்டபாணி-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ