சேறும், சகதியுமான செம்மினிப்பட்டி
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினிப்பட்டியில் சேறும், சகதியுமான தெருக்களால் அப்பகுதியினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.மந்தைக்களம், ஓடைத் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இத்தெருக்களில் இதுநாள் வரை சாலை, வடிகால் வசதிகள் செய்து தரவில்லை. கழிவுநீர் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உற்பத்தியாகி, இரவில் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சுகாதாரம் பாதிக்கிறது. டூவீலர்களிலும், நடந்து செல்வோரும் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், கிராம சபை கூட்டத்தில் முறையிட்டும், ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாலை மறியல் செய்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.