2023ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது
மதுரை: மதுரையில் 2 ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு தற்போது தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது. 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி, மீனாட்சி சோமன் ஆகியோர் விருதுக்கு தேர்வானார்கள். கந்தர்வன் எழுதிய 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவான இந்த குறும் படத்தை நவீன் இயக்கினார். இது உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும் பல விருதுகளை வென்றுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சரவணமருது சவுந்தரபாண்டி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2023 அக்., 14ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற சரவண மருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பெண் பிரச்னையில் சக்திவேல் என்பவர் தனது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவண மருதுவைக் கொலை செய்து உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்தது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது சரவணமருதுவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.