உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தஞ்சாவூர் கோயிலில் இந்திரன் சிலை நிறுவ அனுமதி இல்லை உயர்நீதிமன்றத்தில் தகவல்

தஞ்சாவூர் கோயிலில் இந்திரன் சிலை நிறுவ அனுமதி இல்லை உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்திரன் சன்னதியை திறக்க மற்றும் சிலைகளை நிறுவ தாக்கலான வழக்கில்,'அனுமதி வழங்க வாய்ப்பில்லை. கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் செய்ய அனுமதிக்க இயலாது,'என மத்திய தொல்லியல்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சின்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இங்கு கிழக்கு கோபுரம் நுழைவு வாயில் உள்பக்கத்தில் மருத நில அரசன் இந்திரனுக்கு சன்னதி வைத்து ஆராதனை செய்தார் ராஜராஜசோழன். பூஜை செய்து மக்களும் வழிபட்டனர். விழா எடுத்து கொண்டாடினர் என சிலப்பதிகாரம், மணிமேகலையில் சான்றுகள் உள்ளன. மத்திய தொல்லியல்துறையும் சான்று கூறுகிறது.இந்திரன் சன்னதி 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அது சேதமடைந்துள்ளது. ஆராதனை நடைபெறவில்லை. சன்னதியை திறந்து காலை, மாலையில் பூஜை, வழிபாடு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் தாக்கலான மேலும் சில மனுக்கள் விசாரணைக்கு வந்தன.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.கோயில் தரப்பு: எட்டு திசை கடவுள்களில் 4 சிலைகள் சேதமடைந்துள்ளன. மற்ற 4 சிலைகள் இல்லை. இதில் இந்திரன் சிலையும் அடக்கம். எட்டு சிலைகளையும் புதிதாக நிறுவ அனுமதி கோரி மத்திய தொல்லியல்துறைக்கு தமிழக அறநிலையத்துறை 2008 ல் கடிதம் அனுப்பியது. அனுமதி வழங்கவில்லை.மத்திய தொல்லியல்துறை தரப்பு: அனுமதி வழங்க வாய்ப்பில்லை. கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் செய்ய அனுமதிக்க இயலாது. தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் தொடர்ந்து பராமரிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள்: மத்திய தொல்லியல்துறை சார்பில் தற்போதைய நிலை குறித்து நவ.,5ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ