பள்ளி மாணவர்கள் பின்புலம் சேகரிக்க தடை கேட்ட வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
மதுரை: அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்கும் உத்தரவிற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை, அமீர் ஆலம் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவர்கள் மீது வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா, தாய், தந்தையர் சிறையில் உள்ளனரா, அவர்கள் அகதிகளா என்பன உள்ளிட்ட விபரங்கள் தலைமையாசிரியர்கள் மூலம் சேகரித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பானது. வகுப்பறையில் இவ்விபரங்களை சேகரிப்பதால் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட தகவல்களும் மற்ற மாணவர்களுக்கு தெரிய வரும். இதில் சமூக சூழலை பாதிக்காதவாறு ரகசியம் காக்கப்பட வேண்டும். எதற்காக இத்தகவல்கள் சேகரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தவில்லை. இந்நடைமுறைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு, 'தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், குழந்தைகள் நலத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்., 31ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.