சமையலறையை ஆக்கிரமித்த நெல் மூடைகள்
கொட்டாம்பட்டி : எட்டி மங்கலத்தில் சமையலறையில் நெல் மூடைகளை அடுக்கியதால், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயார் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.எட்டிமங்கலத்தில் 1978ல் கட்டிய ஊராட்சி அலுவலகத்தில் மரம் முளைத்து கட்டடம் சிதிலமடைந்தது. இதனால் ஊராட்சி அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. சிதிலமடைந்த கட்டடத்தின் ஒரு அறையில் துணை சுகாதார நிலையமும், மற்றொரு அறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவும் சமைக்கப்படுகிறது.தற்போது இந்த அறையில் தனிநபர்கள் சிலர் நெல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெரிசலான இடத்தில் நின்று சமைப்பதால் விபத்து அபாயம் உள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், ''அரசு நடுநிலைப்பள்ளி அருகே செயல்படும் காலை உணவு சமையலறையை வேறு இடத்திற்கு மாற்ற மனு கொடுத்துள்ளோம். அதே அறைக்குள் நெல் மூடைகளை வைத்திருப்பதால் குறுகலான இடத்தில் காஸ் சிலிண்டர்கள், அடுப்பு உள்ளது. அருகிலேயே மற்றொரு சிலிண்டரும் வைத்துள்ளனர். அதனால் விபத்து அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் மூடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.பி.டி. ஓ., சங்கர் கைலாசம் கூறுகையில், ''உடனே நெல் மூடைகளை அகற்றி பாதுகாப்பான முறையில் சமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.