துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம்
மதுரை: மதுரையில் அரசு மீனாட்சி மகளிர் கலைக் கல்லுாரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் 3வது நாளாக நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி எதிர்ப்பை தெரிவித்தனர். யு.ஜி.சி., உத்தரவுப்படி ரூ.57 ஆயிரத்து 700 மாதச் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பறைகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நேற்று கவுரவ விரிவுரையாளர் நலச் சங்க மதுரை கிளைத் தலைவர் வாணி ஜமுனா தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அதில் '30 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வருகின்றன. தமிழகத்தில் குடிப்பவர்களுக்கு காட்டும் அக்கறை, படித்தவர்களுக்கு காட்டவில்லை' போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.