மேலும் செய்திகள்
'தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர் வேண்டாம்'
30-Jul-2025
மதுரை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) பணிக்கு மீண்டும் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு எடுத்துள்ளதால் அதற்கான ஆசிரியர்களை மாவட்டம் வாரியாக தேர்வு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருக்கும்போது தேர்தல் என்றால் ஆசிரியர்களுக்கு தான் அதிக எண்ணிக்கையில் பணிகள் ஒதுக்கப்படும் என்ற நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்த நடைமுறையால், ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணி வழங்குவதால் கற்பித்தல் பணி பாதிக்கும் என சர்ச்சை எழுந்ததால் அவர்கள் எண்ணிக்கையை குறைத்து, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் என பிற துறைசார்ந்த அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டனர். பல ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் பி.எல்.ஓ., பணிக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்ய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியதால், கல்வித்துறை சார்பில் குறிப்பாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பி.எல்.ஓ., பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் தேர்தலின்போது வேளாண்மை, புள்ளியியல் உள்ளிட்ட பல துறைகளை தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்வதில்லை என்ற சர்ச்சையும் உள்ளது. இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து, காலை உணவு திட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, சிலாஸ், நாஸ் தேர்வுகளுக்கு தயார் செய்தல், வாசிப்பு பயிற்சி, கலைத் திருவிழா, நலத்திட்டங்கள் வழங்கல், பஸ் பாஸூக்கு விண்ணப்பித்தல், 'எமிஸ்' தளத்தில் மேற்கொள்ளப்படும் 100க்கும் மேலான பதிவுகள் உட்பட கற்பித்தல் அல்லாத திட்டங்கள் சார்ந்த பணிகளால் மூச்சு முட்டிக்கிடக்கின்றனர். இதற்கிடையே பி.எல்.ஓ., பணியும் ஒதுக்கினால் கற்பித்தல் பணி வெகுவாக பாதிக்கும். இப்பணிக்கு கால வரையறை இல்லை. விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டிய ஒரு தொடர் பணி. உதாரணமாக, வாக்காளர் விவரங்களை சரிபார்த்தல், பெயர் நீக்கம், சேர்த்தல், வீடு வீடாக சென்று புதிய வாக்காளர்களை கண்டறிந்து அவர்கள் பெயரை பதிவு செய்தல், வாக்காளர் அடையாளம், முகவரி உள்ளிட்ட விவரங்களை நேரில் சென்று சரிபார்த்தல்,தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை சமர்ப்பித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல். சிறப்பு முகாம் நடத்துதல் உட்பட 20க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் கற்பித்தல் பணியும் பாதிக்கக்கூடாது என்பதால் பள்ளி நேரம் முடிந்த பின் தான் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே உள்ள பணிச் சுமையால் இது கூடுதல் மனஉளைச்சலை தான் ஏற்படுத்தும். தொடக்க கல்வியில் ஆசிரியைகள் அதிகம் என்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பி.எல்.ஓ., பணிக்காக தனி நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் ஆசிரியைகள் இரவு வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. பெண் என்ற ரீதியில் பல்வேறு 'தொல்லைகளை' சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் நலன் கருதி கற்பித்தல் பணி தவிர பிற பணிகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்க கூடாது என்ற நிலையை மேற்கொள்ள கல்வித்துறை முன்வரவேண்டும் என்றார்.
30-Jul-2025