தடை செய்த கூல் லிப் தொடர்ந்து பறிமுதல் அபராதம் விதித்தும் விற்பனை
மதுரை : எத்தனை முறை அபராதம் விதித்தாலும் கடையை மூடி 'சீல்' வைத்தாலும் அபராதத்தை செலுத்திய பின் மீண்டும் கடையை திறந்து புகையிலை பொருட்கள் (தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது) விற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் தமிழக அரசு தடைசெய்த 1128 கிலோ அளவு குட்கா, 'கூல் லிப்' போன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது:கடந்தாண்டு நவம்பர் முதல் போலீசாரும் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களும் குழுவாக இணைந்து பெட்டி கடைகள், பிற கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த அக்டோபரில் மட்டும் 428 குழுக்கள் மூலம் 6266 கடைகளில் ஆய்வு நடத்தி, 1128 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் 'கூல் லிப்' பொருட்கள் 37.5 கிலோ அளவு பிடிபட்டது. 86 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. ரூ.24.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.2023 நவம்பர் முதல் 2024 அக்டோபர் வரை 2119 குழுக்கள் மூலம் 30ஆயிரத்து 441 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.4140 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 438.5 கிலோ 'கூல் லிப்' புகையிலையும் அடங்கும். இதுவரை 844 கடைகள் மூடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.ஒரு கோடியே 45 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதல்முறை புகையிலை வைத்திருப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து 15 நாட்கள் கடை மூடப்படும். 2ம் முறை பிடிபட்டால் ரூ.50ஆயிரம் அபராதத்துடன் ஒருமாதம் கடை மூடப்படும். 3ம் முறை பிடிபட்டால் ரூ.ஒருலட்சம் அபராதத்துடன் 3 மாதம் கடை மூடப்படும் என்றார்.