மணல் திருட்டிற்கு ரூ.4 கோடி அபராதம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்க தலைவர் சுடலைக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடசேரி அரியாறு ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலெக்டர், எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: சட்டவிரோதமாக மணல் அள்ளியவர்களுக்கு எதிராக ரூ.4 கோடியே 95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் டிச.,3க்கு ஒத்திவைத்தனர்.