உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம் இன்று தேரோட்டம்

சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம் இன்று தேரோட்டம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடக்கிறது.பங்குனி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து திருமண அலங்காரத்தில் மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை சுவாமி வரவேற்கும் நிகழ்ச்சி முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.கண்ணுாஞ்சல் நிகழ்ச்சி முடிந்து பெற்றோருடன் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். மாப்பிள்ளை பிரதிநிதியாக அசோக் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக சிவகுரு சிவாச்சாரியார் திருமண சடங்கு செய்தனர். சுவாமிக்கு வெண் பட்டு, தெய்வானைக்கு மாம்பழ கலர் பட்டு சாத்துப்படி செய்யப்பட்டது. திருக்கல்யாணம் மதியம் 1:17 மணிக்கு நடந்தது. இரவு 7:00 மணிக்கு 16 கால் மண்டபம் முன்பு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்ம தேவன், சண்முகசுந்தரம், ராமையா கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு திருமண மண்டபங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

சீர்வரிசை

சோலைமலை முருகன் கோயிலில் இருந்து அறங்காவலர்கள் ரவிக்குமார், பாண்டியராஜ், செந்தில்குமார், மீனாட்சி, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் பணியாளர்கள் பட்டு ஆடைகள், வளையல்கள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், தேங்காய், பழம், பலாப்பழம், தாலிகயிறு, பருப்பு தேங்காய், பழவகைகள் சீர்வரிசையாக கொண்டுவந்தனர். இன்று காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

பக்தர்கள் அவதி

திருக்கல்யாணம் நடக்கும் திருவாட்சி மண்டபத்தில் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்களே அமரமுடியும். மற்ற மண்டபங்களில் பக்தர்கள் நின்று திருக்கல்யாணத்தை தரிசிப்பர். இந்த ஆண்டு பத்தர்களை கோயில் வாசலிலேயே போலீசார் தடுத்தனர். கோயில் நுழைவு மண்டபத்தில் இடமிருந்தும் கோயிலுக்குள் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னதி தெருவில் கடுமையான வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை