உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் உற்பத்தி குறித்து அரசு அறிக்கை; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

வேளாண் உற்பத்தி குறித்து அரசு அறிக்கை; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

மதுரை: ''வேளாண் உற்பத்தி குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை தவறானது. வேளாண்மையில் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது'' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: வேளாண் வளர்ச்சியிலும் மீன்வளத்திலும், கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மூலம் வேளாண் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் வேளாண் உற்பத்தி குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உண்மையில் தமிழகம் வேளாண்மையில் பெரியளவில் பின்தங்கியுள்ளது. நெல், கரும்பு, பருத்தி உற்பத்தியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.62 சதவீதத்தில் இருந்து 5.64 சதவீதமாக குறைந்துள்ளது. கரும்பில் 10.25 சதவீத சர்க்கரை சத்து இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை வழங்க முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கரும்பின் சராசரி சர்க்கரை அளவு 9.5 சதவீதம் மட்டுமே உள்ளது.வாழைப்பழ உற்பத்தியில் மட்டுமே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியில் 3ம் இடத்தில் உள்ளோம். பால் உற்பத்தியில் முதல் 5 இடத்திற்குள் நாம் இல்லை. நெல் உற்பத்தியிலும் இல்லை. விவசாய குடும்பங்களின் சராசரி மாதாந்திர வருவாயாக மேகாலயா ரூ.29 ஆயிரத்து 434 உடன் முதலிடத்திலும், ரூ.26ஆயிரத்து 701 உடன் பஞ்சாப் இரண்டாம் இடத்தில் உள்ளது.தமிழகத்தின் சராசரி ரூ.11 ஆயிரத்து 924யாக 14வது இடத்தில் உள்ளது. 61 சதவீத குடும்பங்கள் மீட்க முடியாத தொடர் கடனில் உள்ளதாக தமிழக அரசின் திட்டக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மூன்றில் இரண்டு பேர் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்த உண்மைகளை மறைத்து விட்டு தவறான அறிக்கையை தமிழக அரசு எவ்வித தரவுகளும் இன்றி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை எந்தெந்த தரவுகள், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெளியானது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை