காற்று மாசை குறைத்த மாநகராட்சி மத்திய அரசு ரூ.13 கோடி ஒதுக்கீடு
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் காற்று மாசை குறைத்ததால், மத்திய அரசின் தேசிய காற்று துாய்மை திட்டத்தின் கீழ் ரூ. 13.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகரில் மாசு அதிகரித்து வருவதால், அதிக காற்று மாசு உள்ள நகரங்களின் பட்டியலில் மதுரையும் இடம் பெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய நகரங்களில் இந்நகரையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய துாய்மை காற்றுத் திட்டம் சார்பில் இதுபோன்ற நகரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாசு குறைக்கப்பட்ட நகரங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.இதனடிப்படையில் 2024 ல் காற்று மாசு அதிகமாக இருந்ததால் மத்திய அரசு நிதியை மதுரை மாநகராட்சி இழந்தது. இதன் பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிமுறைகளை பின்பற்றியதால் இந்தாண்டு மாசு குறைந்தது. இதனால் ரூ. 13.50 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகராட்சி பகுதியில் 2024 மார்ச்சில் காற்றில் உள்ள பி.எம்., 10 வகை நுண் துகள் கலப்பு 63 என்ற அளவில் இருந்து இந்தாண்டு 53 ஆகவும், பி.எம்., 2.5 என்ற நுண் துகள் கலப்பு 30 என்ற அளவில் இருந்து இந்தாண்டு 25 ஆகவும் குறைந்துள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.13.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகராட்சி பகுதியில் மேலும் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் திட்டங்களை இந்நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.