சிலைகளை உடைத்தவர் மனநலம் பாதித்தவர்
திருமங்கலம்:திருமங்கலம் நகராட்சி பழனியாபுரம் குதிரை சாரி குளத்தில் பத்து சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட மனநலம் பாதித்தவரை பிடித்த போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குதிரை சாரி குளம் பழனியாபுரத்தில் ஏழு பேர் சாமி கோவில் உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டு அங்கிருந்த மணி உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வந்தனர்.சி.சி.டி.வி., காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போது சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதி அஜித் 25, என்பதும் இவர் மனநலம் பாதித்தவர் என்பதும் தெரியவந்தது.சுவாமி சிலைகளிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், தராததால், அவற்றின் கைகளை உடைத்ததாகவும் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை திருமங்கலம் நகர் போலீசார் ஆஸ்டின்பட்டி மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.