| ADDED : மே 11, 2025 04:55 AM
அழகர்கோவில் : அழகர்கோவில் பொய்கைக் கரைப்பட்டி ஊராட்சியில் கள்ளழகர் கோயிலுக்குச் சொந்தமான தெப்பம் பராமரிப்பின்றி, பாழடைந்து உள்ளது.தெப்பம் 8 ஏக்கர் பரப்பளவில், மைய மண்டபம் 25 அடி நீள, அகலம் மற்றும் கோபுரத்துடன் அமைந்துள்ளது. மாசி மாத பவுர்ணமியில் கள்ளழகர் தெப்பத் திருவிழா நடப்பது விசேஷமானது.இதற்கு மண்டூக தீர்த்தம் எனும் பெயர் உண்டு. பழமையான இந்தத் தெப்பம் இன்று மோசமான நிலையில் உள்ளது. படிக்கட்டுகள் உடைந்தும், பெயர்ந்தும் கிடக்கின்றன. மைய மண்டபத்தில் பாசிபடர்ந்து, பாழடைந்து இருக்கிறது. கோயில் நுாபுரகங்கையில் இருந்து தண்ணீர் தெப்பத்திற்கு வருவதற்கான வழி அடைபட்டுள்ளதால் தண்ணீர் செல்வதில்லை.மழைநீரால் மட்டுமே நிரம்புகிறது. பல ஆண்டுகளாக திருவிழா தெப்பத்திற்கு வெளியேதான் நடக்கிறது. இத்தெப்பத்தை புதுப்பிக்க 2024ல் ரூ. 5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின்னும் நடவடிக்கை இல்லை. நிதியை பயன்படுத்தி தெப்பத்தை புனரமைக்க வேண்டும்.