பெற்ற குழந்தையை விற்றவர் வாங்கியவர் உட்பட மூவர் கைது
திருமங்கலம் : மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே முனியப்பன் நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி ஜோதி, 42. இவரது கணவர், 20 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டார். மகன் ராஜேஷ், 23, மட்டும் தாய் ஜோதியுடன் வசித்தார்.சமையல் வேலை செய்து வந்த ஜோதி, வேலை தொடர்பாக பல இடங்களுக்கு சென்று வந்தபோது ஏற்பட்ட தொடர்பில் கர்ப்பமடைந்து மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக, ராஜேஷ், ஜோதியை கண்டித்துஉள்ளார்.இதனால், ஜோதி தன் குழந்தையை ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த வீரணன் மனைவி அபிநயாவிடம், 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்து உள்ளார். மேலும், விற்ற குழந்தையை பிரிய மனமில்லாமல், அடிக்கடி பார்க்க கமுதிக்கு சென்றுள்ளார்.இதற்கு வீரணன், அபிநயா எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஜோதி பெருங்குடி போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த பெருங்குடி வி.ஏ.ஓ., அழகேசன் திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், ஜோதி, ராஜேஷ், அபிநயாவை கைது செய்தனர்.